VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Monday 6 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4


அன்புடன் அனைவருக்கும் வணக்கம்.......

6.கதயோகம்;

அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கேந்திர பாவங்களில் இருந்தால் கத யோகமாகும்..
அடுத்த கேந்திர பாவகம் என்பது 1.இலக்னமும்,நான்காம்பாவமும் அல்லது 2.நான்காம் பாவமும்,ஏழாம் பாவமும் அல்லது3. ஏழாம்பாவமும்,பத்தாம்பாவமும், அல்லது 4.பத்தாம் பாவமும்,இலக்னபாவமும் ஆகும்.

கதயோகப் பலன்கள்

இந்த யோகத்தில் பிறந்தவர் செல்வந்தராவார். அனைத்து காலங்களிலும் செல்வந்தேடும் முயற்சி உடையவராகவும் இருப்பார்.. ஆன்மீகப் பற்றுடன் வாழ்வார். ஆன்மீக செயல்பாடுகள் உடையவராவார்.

சிறப்புப் பலன்கள்;

சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கேந்திரங்களில், எதில் கோள்கள் அதிகமாக இருக்கிறதோ அப்பாவகத்தின் செயல்கள் கலப்பு பலன்களாகவும்,கோள்கள் குறைவாக இருக்கக்கூடியப் பாவங்களில் இருக்கும் கோள்களின் காரகங்களும்+ பாவகத்தின் காரகக் குணங்களும் கூதலாக செயல்படும் என்று அறிந்து கொள்க.
இவற்றில் தீயகோள்களின் செயல்கள்,அவை இருக்கும் கேந்திரத்தின் அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்துவனவாக அமையும்.

7.சகட யோகம்;

அனைத்துக் கோள்களும் இலக்னம் மற்றும் ஏழாம் பாவத்தில் இருந்தால் சகடயோகமாகும்.

சகடயோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் வண்டி வாகனத் தொழில் செய்பவராக இருப்பார். பெருந்தன்மை இல்லாத மனைவியையுடையவராவார். நோயாளியாகவும் இருப்பார்.

சிறப்புப் பலன்கள்;

பொதுவாக இலக்னத்தில் கோள்கள் இருப்பது நன்மையென்றால், ஏழில் கோள்கள் இருப்பது அவ்வளவாக நன்மை கிடையாது.. எனும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் துன்பப் பலன்கள், நமது கணிதத்திற்கும் அப்பாற்பட்டவையாகவே ஏற்படும். அதனால் ஏழில் உள்ள கோளின் குணத்திற்கு ஏற்ப பலன்களை யூகித்துக் கூறுதல் வேண்டும்.
இக்கட்டுரையில் ஒவ்வொரு பலனாக எழுதமுடியாது என்பதால் உங்கள் யூகத்திற்கு கொடுத்து விட்டேன்…

8.விஹக யோகம்;

அனைத்துக்கோள்களும் 4 ஆம் பாவத்திலும், 10ஆம் பாவத்திலும் இருந்தால் விஹக யோகமாகும்.

விஹகயோகப்பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் அனைத்து செய்திகளையும் கூறும் தொழில் செய்பவராவார். பயணத்தில் நாட்டமுடையவராவார். கலகம் செய்வதில் விருப்பமும் இருக்கும்.

ஒவ்வொரு இலக்னத்திற்கும் 4,10 ஆம் பாவங்கள் யாரென்றும்,அங்கு எந்தெந்த கோள்கள் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்று சோதிடவியலின் அடிப்படை நூல்களைக் கொண்டு ஆய்ந்துணர்ந்து பலன்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்……..

9. ஸிரிங்காடக யோகம் ;

அனைத்துக் கோள்களும் 1,5,9 ஆகிய திரிகோண பாவகங்களில் இருந்தால் ஸிரிங்காட யோகமாகும்.

ஸிரிங்காடக யோகப்பலன்கள்;

இந்தயோகத்தில் பிறந்தவன் முதுமையில் சுகமாக வாழ்வான். மற்ற வயதுகளில் சில துன்பங்களை அனுபவிப்பான்…

இப்பலன்களை கோள்களைக்கொண்டு பிரித்துப் பலன்களைக் காணுங்கள்…..

10.ஹலயோகம்;

 அனைத்துக் கோள்களும் மற்ற திரிகோண பாவங்களில் இருந்தால் ஹலயோகமாகும்.
மற்ற திரிகோணங்கள் என்பது 2,6,10 ஆம் பாவங்கள், 3,7,11ஆம் பாவங்கள், 4,8,12 ஆம் பாவங்கள் கொண்ட மூன்று பாவங்களாகும்…..

ஹல யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் நிலத்தை உழுது பயிரிட்டு அதன் வழியாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பார். ((( பொதுவாக கலப்பு பாவகங்களில் கோள்கள் இருந்தால் உழைப்பாளி என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்.)))))))

11.வஜ்ரயோகம்;

நற்கோள்கள் இலக்னத்திலும்,ஏழாம் பாவத்திலும் இருந்து, —தீயகோள்கள் நான்காம் பாவத்திலும்,பத்தாம்பாவத்திலும் இருந்தால் வஜ்ரயோகமாகும்.

வஜ்ர யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் குழந்தையிலும்,  முதுமையிலும், அனைத்து சுகங்களையும் அனுபவிப்பவராகவும், மக்கள் செல்வாக்கைப் பெற்றவராயும், வீரமுடையவராகவும் திகழ்வார்….

12. யவயோகம் ;

தீயகோள்கள் இலக்னத்திலும், ஏழாம் பாவகத்திலும் இருந்து – நற்கோள்கள் நான்காம் பாவத்திலும், பத்தாம் பாவத்திலும் இருந்தால் யவயோகமாகும்.

யவயோகப்பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் இளமைக்காலத்தில் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். வீர, தீரத்துடனும் செயல்படுவார்….

13.பத்ம யோகம் ;

அனைத்துக் கோள்களும் நான்கு கேந்திர பாவங்களில் இருந்தால் பத்ம யோகம் அல்லது கமலயோகமாகும். ( தீயகோள்கள்+ நற்கோள்களின் கலப்பு நிலை)

பத்ம யோகப்பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் எல்லையற்ற இன்பங்களை அனுபவிப்பவராகவும், எங்கும் புகழுடன் இருப்பவராகவும், அனைத்து வித்தைகளையும் அறிந்தவராகவும் இருப்பார்…

14.வாபியோகம் ;

அனைத்துக் கோள்களும் பணபரத்திலிருந்தாலும் ( 2,5,8,11,ஆம் பாவங்கள் பணபரம்) அல்லது ஆபோக்கிலியத்தில் இருந்தாலும்( 3,6,9,12 ஆம் பாவங்கள் ஆபோகிலியம்) வாபியோகம் என்று அழைக்கப்படும்.

வாபியோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் பலகாலங்கள் சுகமற்றவராகவும், கருமியாகவும் வாழ்வார்.  செல்வங்களை நிலத்தில் புதைத்து வைப்பவராகவும் இருப்பார்கள்…. அற்ப சுகவாசி….

15.யூபயோகம்;

அனைத்துக் கோள்களும் இலக்ன முதல்  வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது யூபயோகமாகும்… ( 1,2,3,4,)

யூபயோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் அரசரைப் போல் மிகப் பெறும் செயல்களைச் செய்பவராகவும், யாகங்களை செய்வதில் பெயரும் புகழும் அடைபவராவார். எப்பொழுதும் தயாள குணத்துடன் வாழ்பவராவார்.

16. இஸூ யோகம்

அனைத்துக் கோள்களும் நான்காம் பாவ முதல் வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது இஸூ யோகம் அல்லது பானயோகமாகும். ( 4,5,6,7 ).

இஸூ யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் இம்சை செய்வதில் விருப்பமானவரும், போர்க்கருவிகளைச் செய்பவராகவும் சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் பணி செய்பவராகவும் இருப்பார்…..

17.சக்தியோகம்

அனைத்துக் கோள்களும் ஏழாம் பாவமுதல் வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது சக்தியோகமாகும்.

சக்தியோகப் பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் தன் குலத்திற்கு தாழ்ந்த தொழிலை செய்பவராவார். செயலில் திறமையற்றவராவார். மகிழ்ச்சி என்பது சிறிதும் இல்லாதவர். செல்வமும் இல்லாதவராவார்….

18.தண்ட யோகம்.

அனைத்துக் கோள்களும் பத்தாம் பாவமுதல் வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது தண்ட யோகமாகும்.

தண்ட யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் கீழ்நிலைப் பணியாளராகவும் , தனது நெருக்கமான உறவினர்கள், நண்பர்களை விடுத்து தனிமையில் வாழ்பவராகவும் இருப்பார்…


நாபச யோகங்களில் 18 யை விளக்கியுள்ளேன். இன்னும் உள்ள 14 யோகங்களை அடுத்த தலைப்பில் விளக்கிய பின்னர் இந்த யோகங்களைப் பற்றிய கருத்துரையை எழுதுகிறேன். நன்றி…. நாளை சந்திப்போம்…..



Professor Dr.T.Vimalan. Ph.D. 06-04-2015.

Friday 3 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 3 . சிரிக், சர்ப்பயோகம். 03-04-2015


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 3 .


4. சிரிக் அல்லது மாலா யொகம் ;

நற்கோள்கள் கேந்திர பாவங்களில் இருந்தால்  சிரிக் யோகம் என்று கூறப்பட்டுள்ளது.

கேந்திரம் என்பது இலக்னம் , நான்கு , ஏழு , பத்து ஆகிய நான்கு பாவங்களாகும். இப் பாவங்களில் வளர்பிறை சந்திரன், புதன் , குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கோள்கள் மட்டும் இருக்க வேண்டும். மற்ற எந்த கோள்களின் இணைவும் இருக்கக்கூடாது.

குருவும் ,சந்திரனும் மாதத்தின் ஒன்பது நாட்கள் தங்களுக்குள் கேந்திரத்தில் இருக்கும். சுக்கிரனும், புதனும் தங்களுக்குள் கேந்திரத்தில் இருப்பது என்பது நிச்சயமாக நமது நாட்டில் ஏற்படாது…ஏனெனில் சுக்கிரன் சூரியனிலிருந்து 47 பாகை விலகியிருக்கும் .அதேபோல் புதன் 29 பாகையளவில் விலகியிருக்கும். இந்த இரு கோள்களின் தூரத்தையும் கூட்டினால் இடைப்பட்ட தூரம் 76 பாகையாகும். இந்த அளவு மூன்று இராசிகளுக்குள் மட்டும் வருகிறது. எனவே சுக்கிரனும் , புதனும் தங்களுக்குள் ஒவ்வொரு கேந்திரத்தில் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அதனால் சுக்கிரனும்.புதனும் ஒரே கேந்திர பாவத்தில் இருக்க முடியும். எனவே ஏதேனும் மூன்று கேந்திர பாவகத்திலோ அல்லது இரண்டு கேந்திர பாவகத்திலோ, அல்லது ஒரு கேந்திர பாவகத்திலோ இந்த கோள்கள் அமைப்பு ஏற்படும்.

சிரிக் யோகப் பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் உலக இன்பங்களை அனுபவிப்பதும், மகிழ்ச்சியாகவும், அனைவரும் விரும்பும்படி வாழ்வார்.

சிறப்புப் பலன்களை காண்போம் :

இந்த யோகத்தில் இலக்ன பாவகம் தொடர்பில்லாமல் போனால் சாதகரது பெயர் அதிகமாக வெளிப்படாது. மற்றவர் தயவை நாட வேண்டியிருக்கும்.

நான்காம் பாவக தொடர்பு இல்லை என்றால் சாதகரது உறவினர்கள் உதவியை எதிர்பார்க்க முடியாது. அனுபவிக்கும் சுகங்களும் வரையறுக்கப் பட்டதாக அமையும்
.
ஏழாம் பாவக தொடர்பு இல்லை என்றால் சாதகருக்கு எதிர்பாராத மனிதர்களின் உதவிகள் ஏற்படாது. எதிர் பாலினரின் உதவியும் எற்படாது.

பத்தாம் பாவக தொடர்பு இல்லை என்றால், தனது தொழில்முறை அமைப்பு ரீதியாக பெயர் ஏற்படாது. பெரிய மனிதர்களின் உதவியும் தடைபடும்.

( இந்த நிலைகளில் நற்கோள்கள் இருப்பதும் கடினமாகும். ஏனெனில் தீய கோளான சூரியனை விட்டு புதனும், சுக்கிரனும் இணைந்திருக்க வேண்டும். அதன் பின்பு அந்த இணைவு குருவிற்கு கேந்திரமாக அமைய வேண்டும்…).

5.சர்ப்பயோகம். ;

தீய கோள்கள் கேந்திரத்தில் இருந்தால் சர்ப்பயோகமாகும்.

தீய கோள்கள் என்பது சூரியன், செவ்வாய், சனி, ஆகிய மூன்று கோள்களைக்குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. தற்பொழுது நிழல் கோள்களான இராகு, கேதுவையும் சோதிடத்தில் இணைத்துள்ளதால் அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்…. அதனடிப்படையில் உரேனஸ், நெப்ட்யூன் கோள்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்… இவை அனைத்துமே தீய கோள்களாகும்..

இக்கோள்கள் அனைத்தும் கேந்திரங்களில் இருப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். முதலில் சூரியன், செவ்வாய்,சனி கோள்கள் தங்களுக்குள் கேந்திரத்தில் இருப்பதற்கு ஒரு ஆண்டுக்குள் வருவதற்கு வாய்ப்புண்டு.

சர்ப்பயோகப் பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் எப்பொழுதும் துன்பத்துடனே வாழ்க்கையை நடத்துவார். மகிழ்ச்சியற்ற வாழ்வினால் திருப்தியற்ற நிலயில் காணப்படுவார்….

சிறப்புப் பொதுப்பலன்கள் ;

இலக்னத்தில் இக் கோள்கள் இல்லையானால் சாதகர் தன்னம்பிக்கையுடன் தனது செயல்களில் ஈடுபட்டு தனது துன்பங்களை வெற்றி கொள்வார்.

நான்காம் பாவத்தில் இக்கோள்கள் இல்லையானால் சாதகர் உறவினர் உதவியுடன் தனது துன்பத்திலிருந்து விடுபடுவார்.

ஏழாம் பாவத்தில் இக்கோள்கள் இல்லையானால் சாதகர் புதிய மனிதர்களின் உதவியும், எதிர் பாலினரின் உதவியும் பெற்று துன்பத்தைக் குறத்துக் கொள்வார்.

பத்தாம் பாவத்தில் இக்கோள்கள் இல்லையானால் சாதகர் பெரிய மனிதர்களின் உதவியும். தனது கௌரவத்தினாலும் துன்பத்தை எதிர் கொண்டு வெற்றியும் பெறுவார்….

இராகு-கேது.

இராகுவையும், கேதுவையும் இணைத்துப் பலன்கள் கூறப்பட்டால் கூடுதலான கெடுபலன்களை அனுபவிக்க நேரிடும். எப்படியெனில் 1,7,ஆம் பாவத்தில் இக்கோள்களின் செயல்கள் எப்படி இருக்கும் என்று அனைவரும் அறிந்ததே… (கடைசி வரை கணவன் –மனைவி உறவில் துன்பங்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்.) 4,7, ஆம் பாவத்தில் இருந்தால் சுகமும், தொழிலும் எப்படி வேண்டுமானாலும் துன்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இவை சோதிடர்கள் அனைவரும் அறிந்ததே….

இந்த யோகங்கள் கேந்த்திரத்தில் உள்ள கோள்களின் தன்மைக்கேற்ப பலன்களை பிரித்து கண்டு பிடித்துக் கூறவேண்டும்..அப்படி பார்த்தோமானால் அதிகமான கோள்கள் நிலைகளை ஏற்படுத்தி பலன்கள் எழுதலாம்… இருப்பினும் இப்பலன்களை எல்லாம் அவ்வப்பொழுதுள்ள கோள்களின் அடிப்படையில் யூகித்தறிந்து கூறப்பட வேண்டும்.


உரேனஸ், நெப்ட்யூன் கோள்களுக்குரிய பலன்களைப் படித்து அதற்கு தகுந்தாற்போல் பலன்களை அறிந்து கொள்க....


……. நன்றி-----நாளை சந்திப்போம்…


Professor Dr.T.Vimalan. Ph.D.    03- 04 -2015.

  

Wednesday 1 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 2 . 01-04-2015 #RAJAYOKAS.


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 2 .

ரஜ்ஜு யோகம் என்பது குறைவான காலங்களிலேயே நிகழகக்கூடும்.. ஏனெனில் கோள்கள் அனைத்தும் சர இராசிகளில் இருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு சர இராசியிலாவது இருக்கவேண்டும்.

கி.பி. 03-02-1962 மாலை 17.30 இ.பொ.நே. முதல் 05-021962 மாலை 17.30 இ.பொ.நே. வரை அனைத்து கோள்களும் மகரம் இராசியில் இருந்துள்ளன. மகரம் சர இராசியானதால் அதற்குரிய பொதுப் பலன்களில் சாதகர் வாழ்வார் எனலாம்.. ஆனால் பன்னிரெண்டு இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கூறப்பட்ட பொதுப் பலன்களுடன் கோள்கள் ஒவ்வொரு பாவகத்தின் அடிப்படையிலும் ஏற்படுத்தும் பலன்களையும் இணைத்துக் கூறவேண்டும்.

திரும்பவும் இம்மாதிரி அனைத்துக் கோள்களும் மகரத்தில் இணைவது நமது வாழ்நாளில் கிடையாது.

இதேமாதிரி இராகு, கேது நீங்களாக மற்ற ஏழு கோள்களும் சர இராசிகளான இரண்டில் இருந்துள்ளன. கி.பி 25-04-1941 மாலை 16-30 இ.பொ.நே. முதல் 26-04-1941 மாலை 16-30 வரை மேச சர இராசியில் சூ,சந்,பு,வி,சு,சனி, ஆகிய ஆறு கோள்கள் இருந்துள்ளன. செவ்வாய் ஒரு கோள் மட்டும் மகர சர இராசியில் இருந்துள்ளது.

நன்கு கவனியுங்கள் இரண்டு நிலைகளிலும் எத்தனை ஜாதகங்கள் பிறந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் மிகக் குறைவகவே பிறப்பு இருந்திருக்கும். அதுவும் பாவக ரீதியாக கணித்தால் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படும்…..

முஸல யோகம்;


அனைத்துக் கோள்களும் ஸ்திர இராசியில் இருப்பது முஸல யோகமாகும். ஸ்திரஇராசி என்பது இரிஸபம், ஸிம்மம், விர்ச்சிகம், கும்பம் ஆகும். இந்த நான்கு இராசிகளிலோ அல்லது இதில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றிலோ  கோள்கள் இருக்கலாம்.
இந்த யோகத்தில் பிறந்தவர் செல்வந்தராவார். பெருமையும் கீர்த்தியுமுடையவர். அனைத்து செயல்களிலும் வெற்றியுடையவராவார்.

கூடுதலான பொதுப்பலன்களையும் காண்போம்;

இரிஸபராசியானால் : ஆடம்பரங்கள் அனைத்தையும் அனுபவிப்பவராகவும், அனேக மனைவிகளுடையவராகவும், அல்லது காதலர்கள் உடையவராகவும் , வாகனங்களும், கால்நடைகளும், வேளாண்மை நிலங்களும் உடையவராகவும், கூடுதலான மக்கட் செல்வம் உடையவராகவும் திகழ்வர்.

ஸிம்ம இராசியானால் : அதிகாரம் செய்வதில் விருப்பமும், எதிர்பாராத மக்கள் தொடர்புகளும், அரசனாகும் யோகமும் , அனைத்து சுகங்களையும் அனுபவித்தலும், பழமையை விரும்புதலும் மனைவிகளினால் சங்கடங்களை அனுபவித்தலும், அரசாங்கத்தினரால் போற்றப்படுதலும் போன்ற பலன்களை அனுபவிப்பார்.

விர்ச்சிக இராசியானால் ; வெகுளியும், கொடூர எண்ணங்களும், சுயநலமும், பிறர் மனைவிகளிடம் மயக்கமும், சிற்றின்பப் பிரியராகவும், நிதானம் இழத்தலும், சந்தேக குணங்களுடன் சிறப்பாக, செல்வத்துடன் வாழ்வார்.

கும்ப இராசியானால் ; சுயநலமும், பொறாமைக் குணமும், வேண்டா வெறுப்பாகவும், தன்னடக்கம் என்று கூறிக்கொள்பவராகவும், தம்பட்டம் அடித்துக் கொள்வதும், கருமியாக செயல்படுதலும், அனைத்து சுகங்களை அனுபவித்தலும், தனிமையாக இருத்தலும் போன்ற பலன்களை அனுபவித்தலாகும்….

இந்த நிலைகளில் அனைத்துக்கோள்களும் ஸ்திர இராசியில் இருப்பது மிகவும் அபூர்வமாகும். வேண்டுமானால் கணித்துப் பார்த்துக்கொள்க..

நலயோகம் ;


அனைத்துக் கோள்களும் உபய இராசிகளில் இருப்பது நலயோகமாகும். உபய இராசி என்பது மிதுனம், கன்னி, தனுசு, மீனமாகும்.. இந்த நான்கு இராசிகளிலோ அல்லது இதில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றிலோ  கோள்கள் இருக்கலாம்.

இந்த யோகத்தில் பிறந்தவர் செல்வந்தராவார்..அங்கத்தில் குறையிருக்கும். செயலகளில் திறமையிருக்கும். தனக்கென்று ஒருகருத்துடன் செயல்படுபவராவார்.

கூடுதலான பொதுப்பலன்களையும் காண்போம்;

மிதுன இராசி ; மிகவும் திறமையுடனும், சுயநலத்துடன் காரியங்களில் செயல்படுதலும், நல்லதொரு வியாபார நோக்கமும், மகிழ்ச்சியுடன் இருத்தலும், தனது இயலாமையை வெளியில்காட்டாமலும், புறம் பேசுவதும், செல்வம் சேர்ப்பதில் ஆர்வமும் இருக்கும்.

கன்னி இராசி : பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிப்பதும், பணிகளுடன் மற்றவர் நவடிக்கையில் கவனமாக இருத்தலும், போராடுவதும், திறமையானவர் என்று தனது புகழ் பேசுபவரும், பணமே வாழ்வு என்று இருப்பதும் , மற்றவரின் பேச்சை மதிக்காமலும் இருப்பர்.

தனுசு இராசி ; தனக்கென்று ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுதலும், திறமையும், கல்விகளில் நாட்டங்களும், மத்தியஸ்தம் செய்தலும், அஞ்சாமையும், கோபமும், அனைவரிடத்திலும் நட்பும், செல்வத்தில் ஓரளவு நாட்டமும், வாழ்வியில் இன்பங்களை முறையுடன் அனுபவித்தலும் ஏற்படும்.

மீனம் இராசி ; கூடுதலான சுயநலமும், எதையும் புரிந்து கொள்ளுதலும், செல்வக்குறைவும், பங்குதாரரின் இழப்பும், அரசினர் பகையும், பெண்களினால் துன்பமடைதலும், தனது பெருமை பேசுவதில் விருப்பமும், எண்ணங்களில் குழப்பமும் உடையவராவார்.

கி.பி 09-04-1981 மாலை 16-01 இ.பொ.நே.முதல் 11-04-1981 மாலை 20-01 வரை உண்மைக் கோள்கள் ஏழும் உபய இராசிகளில் இருந்துள்ளன. இந் நாட்களில் நிழல் கோள்களான இராகு,கேதுக்கள் உபய இராசிகளில் இல்லை.  ( மீன இராசியில் சூ,செ,பு,சுக்கிரனும், மிதுன இராசியில் சந்திரனும், கன்னி இராசியில் குருவும்,சனியும் இருந்துள்ளன…..

இவ்வாறு கோள்கள் அனைத்தும் சரம் அல்லது ஸ்திரம் அல்லது உபய இராசியில் இருப்பது மிகவும் அபூர்வமாக ஏற்படும். அதிலும் அவ்வகையான சாதகங்களைக் காண்பதும் மிகவும் அபூர்வமாகும். நன்றி ….நாளை சந்திப்போம்……


Professor Dr.T.Vimalan. Ph.D…………………….01-04-2015. 

Tuesday 31 March 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1 //// 31-03-2015.


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1

அன்புடையீர் வணக்கம்…மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது மரியாதைக்குரிய மாணவர்களும், நண்பர்களும் கேட்டுக் கொண்டதற்கினங்க, சோதிடத்தின் ராஜயோகம் பற்றிய விளக்கங்களை தொடர் கட்டுரையாகவும் ,அவ்வப்பொழுது கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் அமைப்பிலும் எழுதுகிறேன்
  
நமது சோதிடவியல் சாத்திரத்தில் ராஜயோகம் என்று சொல்லக்கூடிய அரசயோகங்கள் பற்றி இந்த பகுதியில் புரிந்துகொள்வோம்..

ராஜ யோகம் அனைத்து சாதகங்களிலும் காணப்படுமா அல்லது ராஜயோகமே இல்லாத சாதகங்களும் உள்ளனவா என்ற வினாவை அனைவரும் கேட்கின்றனர்..
அதேபோல் ராஜயொகம் இருந்தால் அரசனைப் போல் வாழ்வு ஏற்படுமா என்றும் வினாவை கேட்கின்றனர்….இவ்விரண்டு வினாக்களுக்கும் விளக்கத்தை கொடுத்துவிட்டு பின்னர் ராஜயோகநிலைகளை விளக்குகிறேன்……

ராஜயோகம் ;

சோதிட சாத்திரத்தின் சிறப்பை உணர்ந்த நமது சோதிடப் பெரியோர்கள் கோள்களையும் அவை இருக்கும் பாவகத்தின் அடிப்படையும் கொண்டு ஆயிரக்கணக்கில் ராஜயோக நிலைகளைக்கூறி  ஒரு சிலவற்றுக்கு அதற்கான பலன்களையும் எழுதியுள்ளனர். உண்மையில் ராஜயோகங்கள் ஒருவரை அரசனாக்குகிறதா அல்லது அரசனுக்குரிய மரியாதையை ஏற்படுத்துகிறதா அல்லது செல்வநிலைகளை உயர்த்துகிறதா அல்லது எந்த ஒரு பலனும் தராமல் உள்ளதா என்று சிந்தித்துப் பார்த்தால் பல செய்திகள் தெரியவருகிறது.

மேற்கண்ட அனைத்து நிலைகளிலுமே மானுடர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே ராஜயோகம் என்பது அவரவர் வாழும் சூழலுக்கும், அடிப்படை பொருளாதாரத்திற்கும்,ஏற்றாற்போல் அமைவதைக் காணமுடிகிறது..எனவே ராஜயோகம் என்பது ஒருவரது வாழ்வில் பொதுவான மதிப்பை ஏற்படுத்தும் அமைப்பு என்று முடிவிற்கு வரலாம்… அரசனும் ஆண்டியாவான் - ஆண்டியும் அரசனாவான். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ராஜயோகக் கோள்கள் நிலை.

ராஜயோகக் கோள்கள் நிலைகளை பல சோதிட அறிஞர்கள் கூறியுள்ள நிலையில் சில சோதிட அறிஞர்களின் கருத்துக்களை இங்கு ஆய்வாக நாம் பார்ப்போம்.
முதலில் பிருகத் ஜாதகத்தில் கூறப்பட்ட நாபச யோகங்களை இங்கு விளக்குவோம்..

நாபச யோகங்கள் ;

இந்த நாபச யோகங்களை யவனர்களின் சோதிட நூலில் இருந்து எடுத்ததாக விளக்கியுள்ளார். யவனர்கள் 1800 நாபசயோகங்களைக் கூறியுள்ளதாகவும் அவற்றை சுருக்கி 32 விதமான நாபச யோகங்களின் பலன்களை இங்கு கூறுகிறார்..   இந்த நாபசயோகங்களை நான்கு உட்பிரிவாகப்பிரித்தும் உள்ளார். அவை ஆக்ருதியோகங்கள் இருபதும், சங்கியயோகங்கள் ஏழும், ஆஸ்ரேயயோகங்கள் மூன்றும், தளயோகங்கள் இரண்டும் ஆக மொத்தம் 32 யோகங்களாகும்…..

இந்த யோகங்களில் இராகு,கேதுவை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.. அப்படி இராகு,கேதுவை கணக்கில் கொண்டால் அவற்றை மற்ற கோளின் இணைவுடன் எடுத்துக் கொள்க…

1 ரஜ்ஜு யோகம்  

அனைத்து கோள்களும் சரராசியில் இருப்பது ரஜ்ஜுயோகமாகும்.
சர ராசி என்பது, மேசம், கடகம், துலாம், மகரமாகும். இந்த நான்கு இராசிகளிலோ அல்லது இதில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றிலோ இருக்கலாம்..

இந்த யோகத்தில் பிறந்தவர் மற்றவருடைய சொத்தில் பற்றுடையவராக இருப்பார். ஆசையுடயவராவார்..பொறாமை குணத்துடன் இருப்பார். பயணத்தில் விருப்பமுடையவர். வெளியூர், வெளிநாட்டிற்கு செல்பவராவார்…இதுவே பிருகத் சாதகத்தில் உள்ள பொதுப் பலன்களாகும்…

கூடுதலான பொதுப்பலன்களையும் காண்போம்.

மேசராசியானல்; கோபமும், தான் என்ற அகங்காரமும், தலைமைப் பண்பும், முரட்டுக்குணமும், போராடுவதும், பகைமையைப் பற்றி கவலையில்லாமலும், மக்கள் மேல் பற்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியும் உடையவராவார்.

கடக இராசியானால் அமைதியாக தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளுதலும், வேளாண்மை நிலங்களை அபகரித்தலும், சிற்றின்ப நாட்டங்களும், செயலில் வெட்கம் இல்லாமலும் அனைத்து சுகங்களை அனுபவித்தலும் ஆகும்.

துலாம் இராசியானால் தன்னுடைய தொழிலில் எதைச் செய்து முன்னேறுவதும், பெண்கள் விருப்பமுள்ளவரும், கருகியாகவும், பொது சொத்துக்களின் மேல் ஆர்வமும், அவமானமடைதலும் ஏற்படும்.


மகர ராசியானால் ; சுதந்திர எண்ணமும், மற்றவர் பொருளை சேர்ப்பதில் திறமையும், கருமியும், வெட்கமறியாமல் இருப்பதும், உச்ச பட்ச பொறாமைக் குணத்துடன் செயல் படுவதும் , தீராத ஆசையுடையவரும். வெட்கமறியாதவராகவும் இருப்பார். (நாளை சந்திப்போம்) 

         Professor  Dr.T.Vimalan Ph.D   31-03-2015.

Wednesday 25 March 2015

சந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .


                   சந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.

அன்புடையீர் வணக்கம்.

நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மாட்டார்கள்.அதனால் ஒருவர் ஒரு கருத்தைக் கூறுகிறார் என்றால் அதற்குரிய உண்மையான காரணம் என்னவென்று பார்க்காமலே அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவர். இதானல் எழும் சிக்கலே தற்பொழுது நாம் நடத்திக் கொண்டிருக்கும் பிரம்ம முகூர்த்தம் எனும் அமைப்பாகும்……..

முகூர்த்தம் ;

இந்து சமயத்தினர் தங்களது வாழ்வியல் செயல்களைத் தொடங்குவதற்கு சில சடங்கு முறைகளை உருவாக்கியுள்ளனர்… அதேபோல் இறைவழிபாட்டுக்குரிய காலம் எதுவென்றும் உருவாக்கியுள்ளனர். இந்த காலங்களை அக்காலங்களில் முகூர்த்தம் என்றே அழைத்தனர். அம்முகூர்த்தங்களில் சடங்குளையும், இறைவழிபாட்டையும் நடத்தி வந்துள்ளனர். இதில் இறைவழிபாட்டிற்குரிய காலங்களில் சடங்குகளைச் செய்ததில்லை… செய்யவும் கூடாது. ஏனெனில் இறைவழிபாடு நடத்தப்படும் காலம்(முகூர்த்தம் ) தீயதாகும்..அந்த தீய விளைவுகளை நீக்கி நற்பலன்களை ஏற்படுத்தி தருவதற்கே இறை வழிபாடுகள் நடத்தப் படுகின்றன.

தெய்வசக்தி- தீயசக்தி;

தெய்வசக்தியாக இறைவனையும் – தீயசக்தியாக பேய் போன்றவற்றையும் எடுத்துக் கொள்க….

உலகத்தில் எத்தனையோ விசயங்கள் பிரிந்து விடுகின்றன. ஏன் கணவன் –மனைவி வாழ்க்கை கூட பிரிவு ஏற்பட்டு வாழ்கின்றனர்… ஆனால் எவராலும் பிரிக்க முடியாத உறவு ஒன்று இருக்கிறதென்றால் அது தான் தெய்வசக்தி-தீயசக்தி உறவாகும். தெய்வசக்தி இல்லாமல் தீயசக்தி வாழமுடியாது..அதேபோல் தீயசக்தி இல்லாமல் தெய்வசக்தியால் வாழமுடியாது. தெய்வசக்தியால் ஒரு பொழுதும் தீயசக்தியை முற்றிலும் ஒழிக்க முடியாது. அதேபோல் தெய்வசக்தியை துன்பப்படுத்தாமல் தீயசக்தியினால் இருக்கமுடியாது.  இதில் எவர் பெரியவர் என்று முடிவிற்கு வர முடியாது. இருப்பினும் தெய்வசக்தியும் ,தீயசக்தியும் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருப்பர். இவர்களை அழிப்பதற்கு எந்த சமயவாதிகளும் துணிவடையமாட்டார்கள்… சமயங்கள் (மதங்கள்) தங்களுக்குள் பலவற்றில் வேறுபாட்டுடன் கூடிய கொள்கைகள் இருந்தாலும், இந்த தெய்வசக்தி-,தீயசக்தி விசயத்தில் ஒரே கருத்துடன் இருக்கின்றன.

சமயங்களின் அடிப்படை தன்மை, இந்த தெய்வசக்தி-தீயசக்தி கொள்கையிலேயே வடிவமைக்கப் பட்டுள்ளன. இதற்காகத் தான் அவ்வளவு பெரிய புனித நூல்கள் உருவாக்கப்பட்டு அன்றாடம் அதில் உள்ள கோட்பாடுகள் மானுடத்திற்கு போதிக்கப்படுகின்றன.

மானுடத்தின் நற்செயல்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து பெறப்பட்டதாகும்…அதேபோல் தீய செயல்கள் அனைத்தும் தீயசக்திகளிடமிருந்து பெறப்பட்டதாகும். மதங்களும், சமயவாதிகளும் ஒருக்காலும் தீயசக்திகள் இல்லாத உலகத்தை உருவாக்க முடியாது. அப்படி தீயசக்திகள் இல்லாத உலக்கத்தை ஏற்படுத்திவிட்டால் சமயவாதிகளுக்கு எந்த பணியும் இல்லாமல் போய்விடும்.. கடவுளின் அடிப்படைப்பணியே தீயசக்திகளின் செயல்களைக் கட்டுப் படுத்துவதாகும். இந்தப் பணியையே கடவுளின் பெயரால் சமய சான்றோர்கள் செய்து கொண்டு வருகின்றனர்..

தீயசக்திகள் வாழுமிடங்கள் ;

அடர்த்தியான இடங்கள், மலை உச்சி, மரத்தின் உச்சி, பருவகாலசந்திப்புகள், அயன சந்திப்புகாலங்கள், மாதசந்திப்புகள், பட்ச சந்திப்புகள், நாளின் பகலிரவு சந்திப்புகள், கருக்கல் காலம், ஒன்றின் தொடக்ககாலம், தலையின் உச்சிமண்டை. வீட்டின் வாசல் நிலை, படிக்கட்டுகள், வீட்டின் மூலைகள், தெருமுனைகள், முச்சந்தி, நாற்சந்திகள், பாழடைந்த கட்டிடங்கள், முற்றுப்பெறாத பகுதிகள், ஒழுங்கற்ற இடங்கள் போன்றவை தீயசக்திகள் வாழுமிடங்களாகும்.

அடர்த்தியான இடங்கள்;

பொதுவாக மரங்களும்,கொடிகளும்,செடிகளும் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் உள்ளே நுழைவதற்கு நமது மனம் எவ்வளவு அச்சப்படுகிறது என்று அப்பகுதிகளுக்கு சென்றவர்களுக்கு நன்கு விளங்கும்… நிச்சயமோ, இல்லையோ அப்பகுதிகளில் தீயசக்திகள் இருக்கலாம் என்ற அச்சம் நம்மிடம் இருக்கிறது.

அதனாலேயே வனக்கோயில்கள் இங்கு உருவாக்கப் பட்டன. இங்குள்ள தீயசக்திகள் அனைத்தும் எனது கட்டுப்பாட்டில் உள்ளன. எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்ற நோக்கில் கோயில்கள் கட்டப்பட்டன.

மலை உச்சி ;

மலை உச்சியில் எல்லாம் ஏறாதீங்கய்யா. அங்கே தீயசக்திகள் வாழ்கின்றன. அங்கு நீங்கள் சென்றால் உங்களைப் பிடித்துக்கொள்ளும் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். மலைஉச்சி என்பது நிலப்பகுதியின் உயர்ந்த இடமாகும். அதற்கு மேல் வானமாகும். அதனால் மலையும் வானமும் சந்திக்கும் அந்த மலைஉச்சிப்பகுதி தீயசக்திகள் வாழுமிடமாகும்.

நண்பர்களே !!அதனாலேயே மலையின் உச்சியில் இறைவனின் கோயில்கள் கட்டப்படுகின்றன. மலையின் உச்சியில் உள்ள தீயசக்திகள் எனது கட்டுப்பாட்டில் உள்ளன. மக்கள் எவரும் பயப்பட வேண்டாம் என்ற நோக்கத்தில் தான் மலைகளில் அனைத்து சமயத்தினரும் கோயில்களைக் கட்டினர்….. ஆதி மானுடத்தின் கண்டு பிடிப்பாகும்..

மரத்தின் உச்சி;

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதென்று விளயாடப் போகும் போது சொல்லி வைப்பாங்கள்……(பட்டுகோட்டையார்) மரத்தின் உச்சிப்பகுதியும் வானமும் சந்திக்கும் இடம் மர உச்சியாகும். அந்த இடத்தில் தீயசக்திகள் வாழ்கின்றன…. எனவே அந்த மரத்தில் கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும்..

மர உச்சியில் உள்ள தீயசக்திகளை விரட்டுவதற்கு மரங்களையே இறைவனாக்கி வழிபட்டு தீயசக்திகளின் அச்சத்தில் இருந்து விடுபடுவதாகும் .மரங்கள் எப்படி தெய்வமானது என்பதற்கு விளக்கம் இதுவாகும்…

பருவகால சந்திப்புகள் ;

கால பருவங்களை பின்னர் விளக்குவோம். இங்கு மங்கை பருவத்தை விளக்குவோம். ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள் என்றும் சடங்காகிவிட்டால் என்றும் கூறுகின்றனர்.. பெண்ணானவள் குழந்தைத் தன்மையிலிருந்து, குழ்ந்தை பெற்றெடுக்கும் தன்மைக்கு மாறிய காலம்,இரண்டு பருவங்கள் சந்திக்கும் காலம் தீயகாலமாகும்..இந்த காலத்தில் தீயசக்திகள் அப்பெண்ணை பிடித்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்படும் சடங்கே பூப்புனித நீராட்டுவிழாவாகும்… அதனடிப்படையில் சில பேயோட்டும் தன்மையில் செயல்களை செய்வர். ருதுவான பெண்ணிற்கு பக்கத்தில் இரும்புகம்பி,உலக்கை, துடைப்பக்கட்டை பொன்றவையெல்லாம் எதற்கு வைக்கிறார்கள் என்று பெரிய பெண்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்……உங்கள் வீட்டு பெரிய அம்மையார்களிடம் ருது சடங்குகள் என்று எவற்றை செய்கிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்…..

இங்கிருந்து தொடங்கிய தீயசக்தியை விரட்டும் பணியே பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாதவிடாய் ஆகும் காலங்களில் உலக்கையுடன் பிரித்து வைத்திருக்க காரணமானது…. தீயசக்தியை ஓட்டுவதே நமது அன்றாடப் பணியாகும்.. ஆனால் அவை தனியாக பிரித்து பார்க்காமல் வேறு ஒன்றுடன் தொடர்பு படுத்தப் பட்டிருக்கும்.

அயனசந்திப்புகள்;

உத்தராயணகாலம் / தட்சினாயனகாலம் ஆகிய இரண்டு பருவ சந்திகளும் இறை வழிபாட்டிற்குரிய நாட்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இக்காலங்களில் வேறு எவ்வித வாழ்வியல் சடங்குகளும் செய்யப்படுவதில்லை.

மாதசந்திகள்;

ஒவ்வொருமாத தொடக்ககாலமும் இறைவழிபாட்டிற்குரிய நாட்களாக உருவாக்கப் பட்டு கோயில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பட்சசந்திகள்;

அமாவாசை / பௌர்ணமி நாட்கள் வளர்பிறை,தேய்பிறை சந்திக்கும் காலமாகும்.. இந்த இரு நாட்களிலும் இறை வழிபாடுகள் மட்டுமே செய்யப்பட்டன. முகூர்த்த விதிகளில் தீங்கான நாட்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது சிலர் நிறைந்த அமாவாசைக்கு எந்த தீங்கும் கிடையாது என்று சில செயல்களைத் தொடங்குகின்றனர். உண்மையில் அமாவாசை நல்ல நாட்களின் வரிசையில் இல்லை….

நாளின் பகலிரவு சந்திப்புகள் ;

ஒருநாளின் இரவு பொழுது முடிந்து பகல் பொழுது தொடங்கும் காலம் சந்திகாலம் என்றழைக்கப்படுகிறது.அதேபோல் பகல் பொழுது முடிந்து இரவுபொழுது தொடங்கும் காலமும் அந்திசந்தி காலம் என்றும் அழைக்கப்படுகின்றது..இக்காலங்களில் தீயசக்திகளின் செயல்கள் அதிகமாக இருக்கும் என்பதால் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும் என்று விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கருக்கல் காலம் ;

கருக்கலில் புறப்பட்டு செல்லாதே!!! காத்து ,கருப்பு அடித்துவிடும் என்பது மூதுரையாகும்.. நன்றாக விடிந்த பின்பு சென்றால் எந்த தீங்கும் ஏற்படாது என்றனர். இந்த காத்து கறுப்பை விரட்டுவதற்காகவே இறைவழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஒன்றின் தொடக்ககாலம் ;

எந்த ஒரு புதிய செயலும் தொடங்குவதற்கு இறை வழிபாட்டை தேர்ந்தெடுப்பதற்கு காரணம்,, தொடக்கத்திற்கும். தொடக்கமின்மைக்கும் இடைப்பட்ட சந்திகால தீயதன்மையை தவிர்ப்பதற்காவே  வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

தலையில் கை வைக்காதே !!

தலை நமது உடலின் மேற்பகுதியாகும். இந்த மேற்பகுதிக்கு மேல் விண்வெளி வந்துவிடுகிறது. அதனால் தலையும் விண்ணும் சந்திக்கும் இடம் என்பதால் தலையில் கை வைக்காதே என்றனர்..அப்பகுதியில் தீயசக்திகள் வாழுமிடமாகும். எனவே தலையில் கைவைக்காதே என்றனர்..

மனிதன் தனது தலையில்  தலைப்பாகை, குல்லா, தொப்பி, முக்காடு, போட்டுக் கொள்வதற்குரிய காரணம் என்னவென்றால் , தீயசக்திகளிடமிருந்து தன் முயற்சியில் காப்பாற்றிக் கொள்வதற்காக அணியப்பட்டதாகும். மாகாபாரதக் கதையின் படத்தில் கூட தலைக்கு வந்த தீயசக்தி ,தலைப்பாகையுடன் சென்றது..என்றனர்.

கோயில்களில் கொடுக்கப்படும் புனித தீர்த்தங்கள் தலையில் தெளித்து கொள்வதற்காக கொடுக்கப்படுகிறது..சில கோயில்களில் கும்பாபிசேகம் முடிந்தவுடன் கோபுர உச்சியில் இருந்து புனித நீர் அனைவரின் தலைகளிலும் தெளிக்கப்படும்….கிறித்துவ ஆலயங்களில் புனிதநீர் தலையில் தெளித்துக் கொண்டே செல்வார்கள். அதேபோல் புனித ஆற்றிலோ, கடலிலோ, குளத்திலோ குளிக்கும் பொழுது தலையை மூழ்கி குளியுங்கள் என்பார்கள்.. குளிக்கமுடியாத சிலர் அந்த புனிதநீரை தங்கள் தலையில் தெளித்துக் கொள்வதைக் காணலாம்.. இவ்வாறு தலையில் உள்ள தீயசக்திகளை விரட்டுவர்.

நாராயண பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் பொழுது தீர்த்தத்தை வாங்கி தலையில் தெளித்துக் கொண்டும், கண்டிப்பாக சடாரியை தலையில் வைத்த பின்னர் தான் புறப்படுவர்,.இவை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ள தன்மையாகும். மானுட தலை எப்படியெல்லாம் தீயசக்திக்ளிடமிருந்து காப்பாற்றப் படுகிறது என்று நன்கு விளங்கியிருக்கும்…… 

ஆண்டவனிற்கு மொட்டை போடுவதற்குரிய காரணமே இதன் அடிப்படையில் வந்ததாகும். தலையில் உள்ள முடிப்பகுதி வானமும்,மனிதனும் சந்திக்கும் இடமாகும். அங்கு தீயசக்திகள் தங்கியிருக்கலாம் என்ற நோக்கில் அவற்றை இறைவனிடமே சேர்த்து விடுவோம் என்ற அடிப்படையில் முடிகாணிக்கைக் கொடுக்கப்படுகிறது… இதுவே முழுமையான ஆன்மீகக் காரணமாகும்.. நமது உடலின் வேறு எந்தப் பகுதியும் சந்தி நிலையில் இல்லாததால் மற்ற எதையும் காணிக்கையாக கொடுக்கத் தேவையில்லை..

அதனாலேயே ஆன்மீகப்பெரியோர்கள் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மொட்டை அடித்துக் கொள்வர்… மொட்டையடித்து முக்காடு போடுவதற்குரிய காரணமும் இதுவாகும்…. ஒரு சிலர் தலைபாகை வைத்து தலையை மறைத்துக் கொள்வர்…

கோயிலின் கோபுரம் உயரமாக கட்டப்படுவதற்கு காரணம் இதுவேயாகும். ஊரின் கோயில் கோபுரம் உயரமாக இருப்பதால் வானமும் கோபுரத்தின் உச்சியின் சந்திப்பு நமக்கு மேலேயே இருந்துவிடுகிறது. இறைவன் கோபுரத்தின் உச்சியிலிருந்து தீயசக்திகளை ஒடுக்கி நம்மை காப்பாற்றுகிறார். ஆதலால் கோயில் இல்லாத ஊரில் வாழாதே என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு நல்ல நாளில் கும்பாபிசேக விழா நடத்தப்பட்டு கோபுரத்தின் உச்சிக்கு புனித நீராட்டுவிழாவும் செய்யப்படும்….இவை தீயசக்திகளை விரட்டுவதாகும்….

வீட்டின் வாசல் நிலை ; 

வீட்டின் வாசல் நிலை என்பது .வீடும், வெளிப்பகுதியும் சந்திக்குமிடமாகும்..எனவே இந்த பகுதியில் தீயசக்திகள் குடி கொண்டிருக்கும் அதனாலேயே நிலையும் கதவும் சாமி படங்களாலும்.சுத்தப்படுத்தி பூஜை செய்வதாலும் தீயசக்திகள் அகற்றப் படுகின்றன. கொடுக்கல்,வாங்கல் – பேச்சுக்கள் போன்று எதுவானாலும் வீட்டின் நிலைக்கு இந்த பக்கமோ அல்லது அந்தப்பக்கமோ இருந்து செயல்படவேண்டும். நிலையை நடுவில் நிறுத்தி செயல்படக் கூடாது என்று கூறியுள்ளனர். இதன் பொருட்டே நாம் தினமும் வாசலை சுத்தம் செய்து கோலமிட்டு வழிபாடு செய்து வருகிறோம்.. ….

படிக்கட்டுகள், வீட்டின் மூலைகள்;

அனைத்துப்படிக்கட்டுகளும், உள்பகுதி, வெளிப்பகுதியை இணைக்கும் சந்திப் பகுதியாகும். இவை தீயசக்திகள் இருக்குமிடமாகும். ஆதலால் அங்கு அமராதே என்று கூறப்பட்டது. அதே போல் வீட்டின் மூலைகள் மூதேவி வாழுமிடமாகும். அதனாலேயே மூலையில் உட்காராதே என்று கூறுவர்…வீட்டின் மூலைகள்—வடக்கு+கிழக்கு போன்று அனைத்து திசைகளின் சுவர்களும் இணையும் சந்திப்பகுதியாகும். இந்த இடங்களில் தீயசக்திகள் வாழும் என்றுள்ளது..அதனாலேயே வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெய்வபூஜை முடிந்தவுடன் புனித நீர் தெளிக்கப்படும்.. படி பூஜை செய்வதும் இதன் அடிப்படையே ….

தெருமுனைகள், முச்சந்தி, நாற்சந்திகள்

தெருமுனைகளும்.முச்சந்திகளும், தீயசக்திகள் வாழுமிடமாகும். இங்கு ஒரு தெருவுடன் மற்றொரு தெரு சந்திக்கும் பகுதியாகும். எங்கு சந்திக்கும் தன்மையுள்ளதோ அங்கு தீயசக்திகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது..அதனால் தீயசக்திகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே அப்பகுதியில் இறைவன் வாழும் கோயில்கள் எழுப்பப்படுகின்றன..முச்சந்தியில் கோயில் கட்டுவதற்கு காரணம் இதுவேயாகும்… அங்குள்ள இறைவன் தீயசக்திகளை கட்டுபடுத்திக் கொண்டெ இருப்பான்..

பாழடைந்த கட்டிடங்கள், முற்றுப்பெறாத பகுதிகள், ஒழுங்கற்ற இடங்கள்

இவற்றில் தீயசக்திகள் வாழும் என்று பல திரைப்படங்களின் மூலமாக அறிந்திருப்போம். எனவே இவற்றைக்கட்டுப்படுத்தவும் இறைக்கோயில்கள் ஏற்படுத்தப்படும். அல்லது எந்த மானுடரும் வாழாத பகுதியாக மாறிவிடும்….

சந்தியாவந்தனம் ;

இந்துசமய வேதியர்களுக்கு தெய்வசக்தியை அழைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு முறையே சந்தியாவந்தனமாகும்..ஒரு நாளின் பகலிரவு சந்திப்பு காலங்களான அதிகாலை கருக்கள் நேரமும், அந்தி சாயும் கருக்கள் நேரமும் ஆகும். இந்த காலங்களில் தீயசக்திகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கடவுளை அழைத்து மக்களையும் உலகையும் காக்கும் பொருட்டு அன்றாடம் வழிபடும் ஒரு செயலாகும். சந்தியாவந்தனவழிபாடு இந்து சமய வேதியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

எனவே வேதம் கூறும் வேதியர் அனைவரும் தினமும் இரு வேளைகள் சந்திவந்தனம் செய்யவேண்டும்…வேதியர்கள் அனைவரும் உலக நன்மைக்காக தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள். ஆதலால் அவர்களுக்கு மட்டும் இந்த சந்தியா வந்தனம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது…. தீயசக்திகளின் தாக்கம் கூடுதலாக இருக்கும் காலம் என்பதால் சந்தியாகாலம் தீய காலமாகும்…

பிரம்ம முகூர்த்தம் ;

பிரம்ம முகூர்த்தம் என்று வேதங்களிலோ அல்லது கிருஹ்ய ஸூத்திரங்களிலோ அல்லது முகூர்த்த நூல்களிலோ கூறப்படவில்லை…

இந்து சமயத்தை பொறுத்தவரை எந்த ஒரு சடங்கானாலும் பகலிலேயே செய்யப்பட வேண்டும் என்று விதியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வியற் சடங்குகள் ,அதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றி முறையாக ஸூரிய உதயத்திற்குப்பின்னர் நல்ல நேரங்களை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.. எந்த ஒரு வாழ்வியற் சடங்கும் இரவு நேரத்தில் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் அதிகாலைக்கு முன்னர் செய்யப்படும் பிரம்மமுகூர்த்த சடங்குகள் சாத்திரத்தில் கூறப்படவில்லை…

எடுத்துக்காட்டாக இரண்டு சடங்குகளை இங்கு குறிப்பிடுகிறேன்…

1.கருப்பாதானச்சடங்கு; 

அக்காலத்தில் சிறு குழந்தை விவாகம் நடத்தப்பட்டது…அதனால் பெண் பருவமடைந்தவுடன் கணவன் –மனைவி உடல்சேர்க்கைக்காக கற்பாதானச்சடங்கு செய்யப்பட்டது. இரவிலே உடல் சேர்க்கை ஏற்பட்டாலும் செய்கின்ற சடங்குகள் பகலிலேயே செய்யப்பட்டன..

2,அந்தியேஸ்டி:

மானுடம் இறந்த பின்னர் செய்யப்படும் சடங்காகும். இறப்பு எப்பொழுது நடந்திருந்தாலும் சுடுகாட்டில் செய்யப்படும் சடங்குகள் பகலிலேயே செய்யப்பட்டன.
இவை போல் எந்த ஒரு சடங்கும் கடவுளை வேண்டி செய்யப்பட்டதாகும். அவை அனைத்தும் பகலிலேயே செய்யப்பட்டன.

காலச்சூழ்நிலையாலும், மக்கள் பெருக்கத்தினாலும், நல்ல புரோகிதர் கிடைப்பது அரிதானதாலும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை விதி விலக்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

எனவே பிரம்ம முகூர்த்த நேரம் என்பது விதி விலக்கப்பட்ட முகூர்த்த நேரமாகும்…

மிக்க நன்றி..

Professor.Dr.T.Vimalan. Ph.D.

26 / 03 / 2015 .  

Saturday 21 March 2015

காலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / 03 / 2015.


காலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே…….

அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் பெறு மகிழ்ச்சியடைகிறேன்……

காலசர்ப்ப தோசம் அல்லது யோகம் என்று சமீபகாலமாக மக்களை அச்சுறுத்தி பரிகாரங்களையும், பலன்களையும் கூறிவருகின்றனர்..இச்செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்………இந்த அச்சுறுத்தும் யோகம், தோசத்திற்கு அடிப்படையான கோள்கள் இராகு , கேதுவை பற்றி விவாதிப்போம்.

இராகு;  

சோதிட சாத்திரத்தில் இராகுவை ஒரு கோளாக பார்ப்பது கி.பி 10 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன் இராகு என்பது கிரகணம் ஆகும். இராகு என்றால் கிரகணம் என்ற கூற்றும் உள்ளது. வால்மீகி எழுதிய இராமாயணத்தில் இராகு என்ற சொல் முழுவதும் கிரகணத்தைக் குறிக்கும் சொல்லாகவே எழுதப்பட்டுள்ளது…..அங்கு இராகு என்பது ஒருகோள் என்று எங்கும் எழுதப்படவில்லை. வராகமிகிரர், கல்யாணவர்மர்,ஸிரிபதி.போன்ற சோதிடர்கள் தங்கள் நூற்களில் இராகு,கேதுவை கோள்களாக குறிப்பிடவில்லை. பின்னர் வந்த சோதிடர்கள் இராகுவையும் கேதுவையு கோள்களாக்கி அவற்றுக்கும் பலன்களை கூறியுள்ளனர்.. 

வராகமிகிரர் தனது ‘பிருகத்சம்கிதா’ என்ற நூலில் பகுதி 5ல் இராகு என்ற தலைப்பில் கிரகணம் பற்றியும் அவை ஏற்படும் இராசிகளை கணக்கில் கொண்டு எந்தெந்த நாட்டிற்கு தீமைகள்,நன்மைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்..இதில் இராகுவை பாம்பின் தலை என்றும், அதன் 180 பாகையை பாம்பின் வால் என்றும் குறிப்பிடுகிறார்…..கேது என்று கிரகணத்தை வராகமிகிரர் குறிப்பிடவில்லை…..

கேது;

கேது என்ற வார்த்தைக்கு சரியான வடமொழி பெயர் புகையாகும்….வானத்தில் தென்படும் வால்நட்சத்திரங்களே கேது (comet) என்று அழைக்கப்பட்டுள்ளன…கேது என்ற கோளை பழைய சோதிட அறிஞர்கள் எவரும் தங்களது நூலில் குறிப்பிடவேயில்லை…..வராகமிகிரரின்,  “பிருகத் சம்கிதாவில்” பகுதி 11 ல் On Comets என்ற தலைப்பில் வால்நட்சத்திரங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்…அந்த வால் நட்சத்திரங்களை கேது என்றே குறிப்பிடுகிறார். வால் நட்சத்திரங்கள் தோற்றத்தில் நீண்ட வாலுடைய புகை போல் தெரிந்ததால் இவ்வாறு குறிப்பிடுகிறார். இந்த வால் நட்சத்திரம் தெரிந்ததால் உலகிற்கு நல்லது இல்லை என்றும் பலன்களாக உள்ளன…. 

எனவே கோள்களைக் கண்டுபிடித்த காலத்திலிருந்து இராகு,கேதுக்கள் என்ற கோள்கள் உருவாக்கப்படவில்லை……..கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் கிரகணப் புள்ளிகளை கோள் களாக உருவாக்கி பலன்களும் கூறிவருகிறோம்…இதனாலேயே பல அறிஞர்கள் வானத்தில் இல்லாத ஒன்றை கோள்களாக்கி அதற்கும் பலன்கள் கூறி ஏமாற்றுகின்றனர் என்று நம்மை வசை பாடுபவர்களும் உண்டு.

காலசர்ப்பதோசம் / யோகம்;

ஒருவருடைய சாதகத்தில் குறிக்கபடும் கோள்கள் இராகு,கேது என்கிற கோள்களுக்குள் இருந்தால் இந்த தோசத்தைக்கூறுகின்றனர்....................40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சோதிட நூல்களில் காலசர்ப்பம் என்கிற வார்த்தையே இல்லை….தற்பொழுது உள்ள நூல்களில் இவற்றைப் பற்றி எழுதி அதற்குப் பலன்களும்,பரிகாரங்களும் கூறி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் விஸேஸமாக ஒன்றைக்குறிப்பிடுகின்றனர். என்னவென்றால் 33 வயதிற்குப்பின்னரே இந்த சாதகம் வேலை செய்யும் என்கிறனர்….இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…..

யோகமும் / தோசமும் ;

எந்த ஒரு யோகமும், தோசமும் தனக்கென்று ஒரு காலவரையரை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவதில்லை. அவை மானுடம் பிறந்த நாளில் இருந்தே செயல்படும் என்றுதான் நூல்களும் கூறுகின்றன. எல்லா யோகங்களும் பன்னிரெண்டு பாவகங்களுக்கும், தசா புத்திகளுக்குள்ளும் இருந்து தான் செயல்பட்டாக வேண்டும். எனவே நல்ல தசா புத்திகள் காலத்தில் யோகங்கள்,,, மரியாதையை ஏற்படுத்தி நன்கு வெளிப்படுத்தும். அதேபோல் தீய தசா புத்தி காலங்களில் யோகங்கள் நம்மை பெரிதும் பாதிப்பில்லாமல் காப்பாற்றும்……..

நல்ல தசா காலங்களில் தோசங்கள் பெரிதாக தெரியாமல் இருக்கும். தீய தசாகாலங்களில் பெரிதாக வெளிப்படும்…..இதை ஒரு பொழுதும் மாற்ற முடியாது……
நமது நாட்டில் ஒருவருக்கு நடைபெறும் நற்பலன்களை அவரது பொருளாதரத்தை வைத்து கணிக்கின்றனர்…..இது முற்றிலும் தவறானதாகும்.
ஒருவருடைய தாச புத்திகளில் 2 ஆம் பாவம் வேலை செய்யும் பொழுதே பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்…அப்பொருளாதாரம் யோக சாதகமாக இருந்தால் பன்மடங்காக பெருகியிருக்கும்….தோச சாதகமாக இருந்தால் சாதாரண நிலையில் இருக்கும்…

1 ஆம் பாவகத்தினால் தனது முயற்சியும்,பெயரும் விளங்கும்…
2 ஆம் பாவத்தினால் பொருளாதாரம் ஏற்படும்.
3 ஆம் பாவத்தினால் உழைப்பும்,
4 ஆம் பாவத்தினால் மகிழ்ச்சியும்,
5 ஆம் பாவத்தினால் அறிவும்,
6 ஆம் பாவத்தினால் கடன்களும்,
7 ஆம் பாவத்தினால் மற்றவர் தயவும்.
8 ஆம் பாவத்தினால் துன்பங்களும்,
9 ஆம் பாவத்தினால் ஒழுக்கமும்,
10 ஆம் பாவத்தினால் தொழிலும்
11 ஆம் பாவத்தினால் எண்ணம் நிறைவேறுதலும்
12 ஆம் பாவத்தினால் செலவுகளும் நடை பெற்று தான் ஆக வேண்டும்.

இது அனைத்து நல்ல யோகங்களுக்கும், தோசங்களுக்கும் பொதுவான தாகும்…..தோசங்களும்.யோகங்களும் தனக்கென்று தனியாக ஒரு நேரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட முடியாது..இதுவே சோதிடப்பலன்களைக்கூறும் முறையாகும்…..
ஆனால் கால சர்ப்பதோசத்தில் 33 வதிற்குப் பின்னரே பலன்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். உண்மையில் எவ்வித ஆய்வும் செய்யாமல் தனக்கு தெரிந்தது போல் கூறும் முரண்பட்ட பலனாகும்…..

மற்றொரு வேடிக்கை என்னவென்றால், இந்த இராகு ,கேதுக்கள் தங்களுக்குள் உள்ள கோள்களின் செயல்களை செய்யவிடாமல் கட்டுப்படுத்துமாம்….அது எப்படி முடியும். அனைத்துக்கோள்களும் பன்னிரு பாவகத்திலும், இராசிகளிலும், நட்சத்திரங்களிலும் உள்ளன. இந்த இராகு,கேதுக்களும் இதில் அடங்கி உள்ளன… சோதிடப்படி கோள்கள் அனைத்தும் பாவகத்தின்படியே பலன்களைக் கொடுக்கும் என்றுள்ளது..
இப்படியிருக்க காலசர்ப்பதோசத்தில் உள்ள கோள்கள் இராகு, கேதுக்களின் பிடியில் இருப்பதால் செயல்படாது என்பதெல்லாம் சோதிடத்தின் அடிப்படை விதியை உடைப்பதாகும்… .உண்மையில் இவ்வாறு எல்லாம் தோசங்களைக் கூறி நாம் தான் மக்களை அச்சுறுத்தி வருகிறோம்…..

இராகு, கேதுக்கள் எந்த பாவத்தில் உள்ளனவோ அதற்கேற்றபடி செயல்படும்..அதேபோல் தன்னுடன் இணைந்த கோள்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி தனது வேலையைப் போல் செய்யும் என்று கூறலாம்….அதை விடுத்து ஏழு இராசிகளுக்குள் உள்ள கோள்களுக்கு பலன்களைக் கட்டுபடுத்தும் என்பதெல்லாம் சரியாக வருமா என்று தோன்றவில்லை.

வானத்தில் இல்லாத இராகு,கேதுவைக்கொண்டு பலன் கூறுகிறார்கள் என்று நம்மை கேவலப்படுத்தும் அமைப்பினர்க்கு இந்த காலசர்ப்பமும் எடுத்துக்காட்டாக அமையும்…

எதிர்காலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு இந்த சோதிடவியல் சாத்திரம் தாக்கு பிடிக்க வேண்டுமென்றால் இராகு, கேதுவிற்கு கூறியுள்ள பலன்களே போதுமானதாகும். 

அதை விடுத்து பரிகாரப் பணத் தேவைக்காக புதிது புதிதாக தோசங்களைக் கண்டுபிடித்து கொண்டிருந்தோமேயானால் வெகு விரைவில் எதிர்காலம் நம்மை ஒதுக்கிவிடும்…..   

ஆய்வு  செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இருக்கிற சோதிடவியலை நாம் கெடுக்காமல் இருந்தால் போதும்…..

மிக்க நன்றி.

Professor Dr.T.Vimalan. Ph.D.
21 / 03 / 2015.